பழனி கோவிலுக்குள் கருவறை புகைப்படம்… அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு.!

திண்டுக்கல் மாவட்டம், பழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் (முருகன் கோவில்) கருவறை வரை ஒருவர் சென்று புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலுக்குள் செல்போன் , கேமிரா போன்ற சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என விதிமுறை இருந்தும் எப்படி கருவறை வரை சென்று புகைப்படம் எடுத்தனர் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் சார்பில் பதில் கூறுகையில், கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் செல்போன் , கேமிரா பயன்படுத்த தடை என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது எனவும், பாதுகாப்பு சோதனையும் 24 மணி நேரமும் நடைபெறுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்து, வரும் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் கோவில்களில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து இந்து அறநிலையத்துறை விளக்கம் தரவேண்டும் என்றும், கருவறை வரை ஒருவரை அனுமதித்து புகைப்படம் எடுக்க காரணமாக இருந்த கோவில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.