தொடரும் பொய் செய்திகள்..! பாஜக சமூக வலைதள பக்கங்களை முடக்க வேண்டும்.! காங்கிரஸ் புகார்.!

கடந்த புதன்கிழமை (டிசம்பர் 13) அன்று பாராளுமன்றத்தில் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இரண்டு பேர் மக்களவையில் குதித்து வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தி கோஷமிட்டனர். அதே போல நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கோஷமிட்டனர். இதனை அவர்களது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்தார் இப்படி இந்த வழக்கின் கீழ் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இருவர் குதித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. அதனை எடிட் செய்து அதில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஒளிந்து இருப்பது போல சித்தரித்து இருந்த விடியோவை பாஜக தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர். இவ்வாறு வேறு சில பதிவுகளும் பாஜக சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி இருந்தது.
இது குறித்து இன்று சென்னை காவல் ஆணையரிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் புகார் ஒன்றை அளித்தனர். அதில் பாஜக தொடர்ந்து பொய்யான செய்திகளை தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் என்றும், இதனால் பாஜகவின் சமூக வலைதள பக்கத்தை முடக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை (ராகுல்காந்தி) கேலி சித்திரம் போல பதிவிட்டு இருந்தனர்.
அதே போல, பாராளுமன்றத்தில் தடுப்புகளை மீறி உள்ளே சென்றவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், காங்கிரஸ் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றார்கள் என்பது போலவும் பொய்யான தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். இது உண்மைக்கு புறம்பான செய்தி, அங்கே கோஷமிட்டவர்கள் ஆர்எஸ்எஸ் வாழ்க, பாரத மாதக்கு ஜே என்றெல்லாம் கோஷமிட்டனர். அப்படியெல்லாம் ஒரு காங்கிரஸ் கட்சிகாரர் கோஷமிட்ட மாட்டார்கள் என பேசினர்.
மேலும், 90 நாளில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இவ்வாறான பொய் செய்திகளை பரப்பி பலனடைய பார்க்கிறார்கள். ஏற்கனவே அவ்வாறு பொய் கூறி தான் 3 மாநில தேர்தலைகளை வென்றுள்ளனர். பாராளுமன்றத்திற்கு உள்ளே செல்ல அந்த 2 பேருக்கு அனுமதி கொடுத்தது பாஜக உறுப்பினர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்ட உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்ய பட்டுள்ளனர் எனவும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த காங்கிரஸ் கட்சியினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.