அரசு வேலை தருவதாக முதல்வர் உறுதி அளித்தார் – மாரியப்பன்

Mariyappan Thangavelu, who won a silver medal at the Tokyo Paralympics, said that she was very happy to meet the Tamil Nadu Chief Minister.

தமிழக முதல்வரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிறகு சென்னை வந்த மாரியப்பன், அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

10 நாட்களுக்கு பிறகு பயிற்சி தொடங்கவுள்ளேன். இந்த முறை பாராலிம்பிக்கில் மழை பெய்ததால் சற்று இடையூறாக இருந்தது. இதனால் தங்கம் வெல்ல முடியவில்லை என்றாலும் வெள்ளி பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி. அடுத்த முறை நிச்சயம் தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.

முதல்வருடன் வேலை கேட்டு கோரிக்கை வைத்தேன். எனக்கு அரசு வேலை தருவதாக முதல்வர் உறுதி அளித்தார் என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாரியப்பனுடன், திமுக எம்பி கனிமொழியும் உடனிருந்தார். நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், அரசு வேலை கேட்டு முதல்வர் முக ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

கடந்த 2016ல் என்னுடன் பதக்கம் வென்றவர்கள், ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்கள் என அனைவருக்கும் வேலைவாய்ப்பு (class one job) வழங்கப்பட்டது. ஆனால், எனக்கு இதுவரைக்கும் எந்த வேலையும் வழங்கவில்லை. மற்றவர்களுக்கு வழங்கியது போல் எனக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.