டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!
அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியது. டாஸ்மாக் என்பது தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை கட்டுப்படுத்தும் அரசு நிறுவனம். இந்த சோதனையில், அமலாக்கத்துறை ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தது. அவர்கள் இதை நிதி முறைகேடு மற்றும் ஊழல் சம்பந்தமாக செய்ததாக கூறினர். ஆனால், இந்த சோதனை தமிழ்நாடு அரசுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சோதனைக்கு பிறகு, தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். இது சட்டவிரோதமாக நடத்தப்பட்டது எனவும், இதனை காரணமாக வைத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தி வழக்கு தொடர்ந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு முதலில் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அவர்கள் அமலாக்கத்துறையின் விசாரணையை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டனர். ஆனால், பின்னர் அவர்கள் இந்த வழக்கில் இருந்து விலகினர். அதனால், வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அதன்பிறகு, தமிழ்நாடு அரசு, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி, ஏப்ரல் 4, 2025 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. மாநில உரிமைகள் மற்றும் பெடரலிசம் (மத்திய-மாநில அதிகார பகிர்வு) மீறப்பட்டதாக அவர்கள் வாதிட்டனர். ஆனால், உச்ச நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. “தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதாவது, சென்னை உயர் நீதிமன்றமே இதை தீர்க்கட்டும் என்று முடிவு செய்தது.
மனுவை திரும்பப் பெற்றது
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை அடுத்து, தமிழ்நாடு அரசு தனது மனுவை இன்று திரும்பப் பெற்றது. உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்ததால், இப்போது அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கை நடத்த முடிவு செய்துள்ளனர். இதை அரசின் தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ED நடத்திய சோதனைக்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதைப்போலவே, டாஸ்மாக் நிர்வாகம், மத்திய அமலாக்கத்துறை (ED) நடத்திய விசாரணைக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.