முதல்வர் மருந்தகம், முதல்வரின் காக்கும் கரங்கள்.! முக்கிய திட்டங்களை அறிவித்த தமிழக முதலமைச்சர்.!

Tamilnadu CM MK Stalin

சென்னை : சுதந்திர தினவிழா நிகழ்வில், “முதல்வர் மருந்தகம்”,” முதல்வரின் காக்கும் கரங்கள்” ஆகிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து அது பற்றிய கடனுதவி, மானிய விவரங்களை விரிவாக கூறினார்.

இன்று நாடு முழுவதும் 78வது சுதந்திர தினவிழா நிகழ்வுகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார். பின்னர், நல்லாளுமை விருதுகள், கல்பனா சாவ்லா விருது, தகைசால் விருது, முதலமைச்சரின் இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருது பாட்டில்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு முதலமைச்சர் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

முதல்வர் மருந்தகம் :

அதன் பிறகான நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முதல்வர் மருந்தகம்” மற்றும் “முதலமைச்சரின் காக்கும் கரங்கள்” திட்டங்கள் பற்றி பேசுகையில், ” ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னரே நமது அரசுத் திட்டங்களைச் செயலாற்றி வருகிறது. அரசு மருத்துவமனைகளை நாடி வரும் மக்களுக்குச் சிறப்பான மருத்துவ சேவையையும் ,  அவர்களுக்கான மருந்துகளையும் நமது அரசு இலவசமாக வழங்கி வருகிறது.

இன்னும் பலர், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று தங்களுக்குத் தேவையான மருந்துகளை வெளியில் அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்கும் நிலை உள்ளது . இதனை போக்குவதற்கு “முதல்வர் மருந்தகம்” திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், அதிக மருந்து செலவு ஏற்படும் நீரழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நல பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பொது மருந்துகள் தேவைப்படுவோருக்கும் முதல்வர் மருந்தகத்தில் குறைவான விலையில் மருந்துகள் கிடைக்கும்.

இந்த முதல்வர் மருந்தகம் திட்டம் வரும் பொங்கல் தினம் முதல் தொடங்கப்படும். அப்போது முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். முதல்வர் மருந்தகம் துவங்குவதற்கு ஏதுவாக மருந்து ஆளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் கடனுதவி அளிக்கப்படும். மேலும், 3 லட்ச ரூபாய் வரையில் மானியம் வழங்கப்படும்.” என்று முதல்வர் மருந்தகம் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவரித்துப் பேசினார்.

முதலமைச்சரின் காக்கும் கரங்கள் :

அடுத்ததாக, முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டம் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,” இந்திய நாட்டின் புதுக்கப்புக்காக இளம் வயதில் ராணுவப் பணியில் சேர்ந்து, தற்போது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ள ராணுவ வீரர்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில், முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ஏதுவாக 1 கோடி ரூபாய் வரையில் கடன் உதவி வழங்கப்படும். அதில் 30 விழுக்காடு மூலதன மானியமாகவும், 3 விழுக்காடு வட்டி மானியமாகவும் வழங்கப்படும். மேலும், முன்னாள் ராணுவத்தினருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவை அளிக்கப்படும். ராணுவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் இத்திட்டம் மூலம் பயன்பெறலாம்.

அடுத்த 2 ஆண்டுகளில் 400 முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியமாகவும், 3 விழுக்காடு வட்டி மானியமாகவும் வழங்கப்படும் என்று முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தியாகிகள் ஓய்வூதியம் :

மேலும் முதல்வர் பேசுகையில், ” சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மாநில அரசு வழங்கும் 20 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமானது இனி 21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் 11 ஆயிரம் ஓய்வூதியம் 11,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், வஉசி வழித்தோன்றல்களுக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் 10,500 ரூபாயாக வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய சுதந்திர தின விழாவில் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்