இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு! தங்கம் தென்னரசு பெருமிதம்!

எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டை சமநிலை தவறாமல் வழி நடத்துவோம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Thangam Thenarasu

சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி  சட்டப்பேரவையில்  தமிழக அரசு மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையை தொடங்கினார். சட்டப்பேரவையில் பேசிய அவர் ” தமிழ்நாடு இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாது, நம் உரிமைகளைக் காக்கும் முதலமைச்சரை நாடே பாராட்டிக்கொண்டு இருக்கிறது.மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு தான்.

இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி இப்போது வெற்றிகரமாக நடைபோடுகிறது. எனவே, இந்த நேரத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமிடல் தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் அப்படியான அம்சங்கள் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும்.மேலும் 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்” எனவும் பேசினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அவர் ” இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தொழில்நுட்பத்தின் துணை கொண்டு தீர்வு காணப்பட வேண்டும்” எனவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு  தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்