மாணவர்கள் இ- பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் தேதியை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி, 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும் என்றும் அதேபோல, தேர்வு எழுத முடியாமல் போன 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சில மாணவர்கள் வெளி மாவட்டத்தில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு மற்றும் அவசர தேவைகளுக்காக இ-பாஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.