மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கினால் கடும் நடவடிக்கை -அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை.!

மதங்களுக்கு இடையே மோதல் விளைவிக்கும் போக்கை யார் செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
கடந்த சில நாள்களுக்கு முன் “கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனலில் கடவுள் முருகன் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்தும் இந்துமத தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும், தொடர்ந்து இழிவுபடுத்தியும் வீடியோ வெளிட்டு இருந்தது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வீடியோவை வெளியிட்ட சுரேந்திர நடராஜன் மற்றும் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, கருப்பர் கூட்டம் யூடியூப் விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் மதங்களுக்கு இடையே மோதல் விளைவிக்கும் போக்கை யார் செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என கூறினார்.