விஜயகாந்த் :மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உருவத்தை AI- தொழிநுட்பம் மூலம் புது படங்களில் இயக்குனர்கள் கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் ஒரு பக்கம் வைரலாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக, விஜய் நடித்து வரும் ‘கோட்’ மற்றும் விஜயகாந்த் மகன் நடித்துள்ள ‘படைத்தலைவன்’ ஆகிய படங்களில் விஜயகாந்த் AI-மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், திரைப்படங்களில் AI தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தின் உருவத்தை பயன்படுத்த இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை எனவும், அனுமதியின்றி இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின்(AI TECHNOLOGY)மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பத்தின்(AI TECHNOLOGY)மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.
unknown node