மின்கட்டண விவகாரத்தில் ஸ்டாலின் மக்களை குழப்புகிறார் – அமைச்சர் தங்கமணி

மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்றும் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது, பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்தது.
இதனிடையே மின்கட்டண உயர்வை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.திமுகவினர் தங்கள் வீடுகள் முன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், மின் கட்டண கணக்கீட்டில் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார். ஸ்டாலின் குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மையில்லை.மின் கணக்கீடு பணி என்பது தற்போது தமிழகம் முழுதும் நடைபெற்று வருகிறது. மின் கணக்கீடு செய்ததில் தற்போது செலுத்தும் தொகை அதிகமாக இருப்பின், எதிர்வரும் மின் கட்டணத்தில் அந்த தொகை சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.