திருப்பூரில் மாமனாரைச் சுட்டுக்கொன்ற மருமகன்..! குடும்ப தகராறால் நடந்த கொடூரம்.!

குடும்ப தகராறு காரணமாக துப்பாக்கியால் மருமகன் மாமனாரைச் சுட்டுக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tiruppur Gun shot

திருப்பூர் : காங்கேயம் அடுத்த எல்லப்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி சாமி. இவரது மகள் அம்பிகாவின் கணவர் ராஜ்குமாருக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இது கைகலப்பு வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம்போல் பழனிசாமி மாடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்குச் சென்ற ராஜ்குமார், அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு திடீரென கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து பழனிசாமியைச் சரமாரியாகச் சுட்டுள்ளார்.

சுமார் 5 முறை துப்பாக்கி குண்டுகள் பழனிசாமியின் உடலில் பாய்ந்ததாகக்கூறப்படுகிறது. தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பழனிசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதல்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பழனிசாமியைச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த ராஜ்குமார், படியூர் என்ற இடத்தில் வைத்து தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். தொடர்ந்து அவரை அங்கிருந்த மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிகிச்சைக்குப் பிறகு கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் பழனிசாமியின் உடலை மீட்ட போலீஸார், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குடும்ப தகராறு காரணமாக மாமனாரை மருமகன் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்