காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.! யார் இந்த குமரி அனந்தன்?
குமரி அனந்தன் தற்பொழுது சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன், நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக் குறைவு காரணமாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நள்ளிரவு 12:15 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது மறைவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி அனந்தன், தெலங்கானா ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையாவார். மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் அண்ணனும் இவர் தான். குமரி அனந்தன் மறைவு குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் பெரும் இழப்பாக அமைந்துள்ளது.
அவரது உடல் தற்பொழுது சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குமரி அனந்தனின் மறைவு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அவரது உறவினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், “அரசியலிலும் இலக்கியத்திலும் செல்வராக திகழ்ந்த எனது பெரியப்பாவின் மறைவு வேதனையை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
குமரி அனந்தன்
குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் மட்டுமல்லாமல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் பல ஆண்டுகள் சேவையாற்றியவர். 1933 மார்ச் 19 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த இவர், தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவராகவும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். பெருந்தலைவர் காமராஜருடன் நெருக்கமாக பணியாற்றியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராகவும் ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மொத்தம் 19 ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றினார். 1980களில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை தொடங்கிய அவர், பின்னர் அதை மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைத்தார்.
தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக 17 முறை பாதயாத்திரைகளை நடத்தியுள்ளார். குமரி அனந்தன் தமிழ் இலக்கியத்திலும் தனி முத்திரை பதித்தவர். பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்றுத் தந்தவர் என்ற பெருமை இவரைச் சேரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025