நிதியை நிர்மலா சீதாராமன் எப்போது யாரிடம் கொடுத்தார்? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி!

சென்னையில் நேற்று நடைபெற்ற விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் 2014 – 2023 வரை இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. அதிலிருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி தமிழகத்தில் இருந்து பெற்ற வரியைவிட கூடுதலாக தான் நிதி கொடுத்து இருக்கிறோம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு பதில் அளித்தும், வெள்ளப்பாதிப்பை பார்வையிட பிரதமர் மோடியால் வரமுடியாத எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொடநாடு வழக்கு- எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக உத்தரவு..!
இது குறித்து பேசிய அவர் ” மாநில அரசின் நிதியில் தான் ஒன்றிய அரசு இயங்கிக்கொண்டு இருக்கிறது. மாநில அரசின் நிதி தான் ஒன்றிய அரசு நிதி. ஒன்றிய அரசுக்கென்று தனி வருவாய் எல்லாம் கிடையாது. அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூடுதல் நிதி கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்.
அவரிடம் நான் கேட்கிறான் ஒன்றிய நிதியை யாரிடம் எப்போது கொடுத்தீர்கள்? தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியை எடுத்துக்கொண்டு அதை எங்களுக்கே பிரித்துக் கொடுப்பதாகக் கூறுவதா?. மத்திய அரசு, அரசாங்கம் நடத்துகிறதா? அல்லது கந்து வட்டி நடத்துகிறதா?
மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது அந்த சமயத்தில் களத்தில் இறங்கி நான் வேலை செய்தேன். ஆனால், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரே ஒரு கூடாரத்திற்குள் நின்று கொண்டு புகைப்படங்களை மட்டும் பார்த்துவிட்டு வெள்ள பாதிப்பை பார்வையிட்டதாக கூறுகிறார். இதற்கு நேரில் வராமல் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் புகைப்படங்களை அவர் பார்வையிட்டிருக்கலாமே. எதற்காக அங்கு இருந்து இங்கு வரை வந்தார்?
திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்துவைக்க பிரதமர் மோடி வந்தார். அவரால் அதற்கு வரமுடிகிறது தூத்துக்குடிக்கு வர முடியவில்லை.திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்துவைக்க வர முடிந்த பிரதமர் மோடியால், தூத்துக்குடிக்கு ஏன் வரமுடியவில்லை?” எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.