10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் ,ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அனைவரும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டதை தெடர்ந்து, சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு (Unit Test) நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாதந்தோறும் 50 மதிப்பெண்களுக்கு வாட்சப் வாயிலாக மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.