“நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும்” – ரேவந்த் ரெட்டி அறிவிப்பு.!
பா.ஜ.க. நம்மை பேசவே அனுமதிப்பதில்லை, அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள் என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சாடியுள்ளார்.

சென்னை : சென்னையில் தற்போது நடைபெற்று வரும் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களின் முதல்வர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் தொடக்க உரையாக தமிழ்நாடு முதலமைச்சார் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அதை தொடர்ந்து துணை முதலவர் உதயநிதி மறுசீரமைப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினார். பின்னர், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உரையாற்றினார். அவரது உரையில், முக்கியமாக தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்த தென் மாநிலங்களின் நிலைப்பாட்டையும், அதன் தாக்கங்களையும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “நமது மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனைதான் தொகுதி மறுவரையறை, இதற்காக கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். பா.ஜ.க. நம்மை பேசவே அனுமதிப்பதில்லை, அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தி, சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை, கட்சி வேறுபாடுகளை களைந்து ஒன்றாக இணைந்து இதை எதிர்த்து போராடுவோம்.
டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை, அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள். எனது முதல் கருத்து, மக்களவை தொகுதியை அதிகரிக்க வேண்டாம். தொகுதி மறுசீரமைப்பால் தென் இந்தியா அரசியல் குரலை இழக்கும். இந்திரா காந்தி ஆட்சியிலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை. மக்கள்தொகை அடிப்படையிலான வரம்பை நாங்கள் ஏற்க மாட்டோம். மக்களவையில் தென் மாநிலங்களுக்கு 33% இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று பேசியுள்ளார்.