ஆளுநர் விவகாரம்.! குடியரசுத் தலைவரை சந்திக்க செல்லும் தமிழக அரசு பிரதிநிதிகள்.!
ஆளுநர் ரவி விவகாரம் குறித்து குடியரசு தலைவரை சந்தித்து மனு அளிக்க தமிழக அரசு பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் , தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அது பூதாகரமாக வெளியில் தெரிய ஆரம்பித்தது.
தமிழக அரசு வழங்கிய உரையில் சில பகுதிகள் மற்றும் வார்த்தைகளை விட்டுவிட்டு ஆளுநர் ரவி உரையாற்றிய விவகாரம் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது. மேலும் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்ற குரலும் வலுத்தது.
இந்நிலையில், இந்த ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பிரதிநிதிகளாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, என்.ஆர்.இளங்கோ, வில்சன் ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளனர்.
இந்திய அரசியல் சாசனத்தை மீறி செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுறைகள் வழங்க வேண்டும் என குடியரசுத் தலைவரை தமிழக அரசு பிரதிநிதிகள் வலியுறுத்தி மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.