த.வெ.க விஜய் பற்றிய கேள்வி…”ஐயோ சாமி”.. ஓ.பி.எஸ் கொடுத்த ரியாக்ஷன்!
விஜயின் அரசியல் குறித்த கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தேனீ மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பதில் அளித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். அரசியலில் களமிறங்கியதை தொடர்ந்து அவருடைய அரசியல் செயல்பாடுகளும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, அவர் சமீபத்தில் பிரசாந்த் கிஷோரை சந்தித்து இருந்தார். விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு மூன்று மணிநேரம் நடந்ததாகவும், த.வெ.க-வின் தேர்தல் வியூக சிறப்பு ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட உள்ளதாகவும் கூட தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில், விஜய் அரசியல் வருகை குறித்தும் அவருடைய அரசியல் செயல்பாடுகள் குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேனீ மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் விஜய் அரசியல் வருகை குறித்து உங்கள் கருத்து என்ன என? செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.
அதற்கு முதலில் பதில் அளிக்க தயங்கிய ஓ. பன்னீர்செல்வம் ஐயோ சாமி சரணம் ஐயப்பா என முணுமுணுத்தார்..அதனை பார்த்த அவருக்கு பின் இருந்த ஆதரவாளர்களும் சிரித்தனர். பிறகு பேச தொடங்கிய ஓ. பன்னீர்செல்வம் ” விஜயை பற்றி நான் ஏற்கனவே பல இடங்களில் பல்வேறு கருத்துக்களை சொல்லியிருக்கிறேன். அரசியல் ரீதியாக அவர் அரசியல் களத்தில் அவர் எந்த இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார் என்பது தான் முக்கியம்.
தமிழர்களுடைய நலன்..தமிழக வெற்றிக் கழகம் என்று வைத்திருக்கிறார். எனவே தமிழர்களுடைய நலன், தமிழர்களுடைய பாரம்பரியம், அணைத்து மக்களையும் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரே பார்வையில் பார்க்கின்ற நோக்கம் இது அரசியல் பார்வையாக விஜயிடம் இருக்கிறதா? என்பதை அவர் நடந்து வருகின்ற பாதையை உற்றுநோக்கி அது சரியா தவறா என மக்கள் பார்ப்பார்கள். அதனை வைத்து அவர் வெற்றிபெறுவாரா? அல்லது தோல்வி அடைவாரா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்” எனவும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.