அரசியல் ரீதியாக தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது..! – கனிமொழி எம்.பி

திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்திருந்தார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
சென்னையில் இன்று மகளிர் உரிமை மாநாடு! 5 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி!
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்.பி அவர்கள், திமுக மகளிர் அணி மாநாட்டில் பெண்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து பேசப்படும். அரசியல் ரீதியாக தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது. பெண்கள் குறித்த அக்கறை, அவர்களுக்கான கவலைகள் குறித்து பேச உள்ளோம் என தெரிவித்துள்ளார்.