தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து பிரதமர் மோடி தூக்கணும்! ஆவேசமாக பேசிய வைகோ!

தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என டெல்லி நாடாளுமன்றத்தில் வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.

vaiko about dharmendra pradhan

டெல்லி :நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்ற நிலையில், அதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதில் பேசும்போது ” முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையை நாசமக்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரையில் திமுக எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள்” என கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அதனைத்தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் உடனடியாக என்னுடைய பேச்சு வருத்தமளித்துள்ள காரணத்தால் நான் இந்த நேரத்தில் அதனை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என கூறினார்.

இருப்பினும், இந்த விவகாரம் நிற்கவில்லை. திமுகவை சேர்ந்தவர்கள் அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். அதைப்போல, அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் இன்று காலை பதாகைகளை ஏந்தி மன்னிப்பு கேள்..மன்னிப்பு கேள் என முழக்கமிட்டனர்.  உதாரணாமாக, திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆ. ராசா, டி.ஆர். பாலு, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கருப்பு உடை அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த வைகோ “மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவமாக தமிழர்களை நாகரீகமற்றவர்கள் என்று  பேசியது கண்டனத்திற்குரியது. அவருடைய பேச்சு தமிழ்நாடு மக்கள் மனது வெகுவாக புண்படுத்தியுள்ளது. எனவே, அவர் மத்திய  கல்வி அமைச்சர் என்கிற பதவியிலிருந்து நீக்கம் செய்யவேண்டும். பிரதமர் மோடி உடனடியாக அவரை நீக்கம் செய்யவேண்டும் என இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்.  தமிழ்நாட்டு எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களை நாகரீகமற்றவர்கள் என பேசிய அவர் கண்டிப்பாகவே  மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மிகவும் ஆவேசத்துடன் வைகோ பேசினார்.