தமிழகத்தில் பஸ்களை இயக்க வேண்டும் – மக்கள் வேண்டுகோள்
தமிழகத்தில் கட்டுபாட்டுகளுடன் பொது போக்குவரத்தை அனுமதி கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும், போக்குவரத்து வசதிகளையும் தடை செய்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக தடை செய்யப்பட்டுள்ள பொது போக்குவரத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரடங்கால் கட்டுமான தொழில்களுக்கும், வணிக நிறுவனங்கள், பால் விநியோகம், உணவு பொருள் வழங்கல் உள்ளிட்ட பல துறைகளுக்கு அத்தியாவசிய மக்கள் பணி என்ற முறையில் அனுமதி வழங்கிய போதிலும் அவர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை. போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டிருப்பதால் பல தொழிலாளர்கள் தங்களது வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவில் மராட்டியம், டெல்லி, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா ஆகிய பகுதிகளில் கட்டுபாட்டுகளுடன் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதே போன்று சமூக இடைவெளி, முக கவசம், சானிடைசர் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்திலும் பொது போக்குவரத்தை இயக்க வேண்டும் என்று மக்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
தற்போது பொது போக்குவரத்து முடக்கத்தால் தனி மனித வாகன பயன்பாடு, அதாவது இருசக்கர வாகனங்கள் சாலைகளில் அதிகரித்துள்ளது. மேலும் பல ஏழை, எளிய மக்கள் பொது போக்குவரத்தை நம்பி இருந்தனர். தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்கு ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் திருமணம், மரணம் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு தனியார் டிராவல்ஸ் ஏஜென்சியை அதிகம் பணம் கொடுத்து நாடுகின்றனர். இதனை எல்லாம் கணக்கில் கொண்டு தமிழகத்திலும் பொது போக்குவரத்தை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.