குட் நியூஸ்: தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.62 லட்சமாக உயர்வு!
தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.62 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலிலும், குணமானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 5,723 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,249 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 73.51 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 முதல் 89 பேர் வரை கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நிலையில், 5000 முதல் 6000 பேர் வரை குணமடைந்து வருவது, மக்களிடையே ஆறுதல் அளித்து வருகிறது.