சென்னை :தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது அரசு முறைப் பயணமாக மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு பங்காக சமீபத்தில் 2 நாள் அரசு முறைப் பயணமாக விருதுநகர் சென்று கள ஆய்வும் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொண்ட பயணத்தைக் குறித்தும், அந்த பயணத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்தும் கடிதம் ஒன்றை எழுத்து அதனை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த கடிதத்தில், ” ‘மாதம் மும்மாரி பொழிந்ததா?’ என்று அரண்மனை உப்பரிகையில் நின்று வேடிக்கை பார்த்தபடி மந்திரிமார்களிடம் நிலவரம் கேட்கும் ஆட்சியல்ல இது.
அன்றாடம் மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை வகுத்து, அவை முறையாகச் செயல்படுகிறதா என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து, பணிகளை நிறைவேற்றிடும் ஜனநாயக மாண்புமிக்கது நம் திராவிட மாடல் ஆட்சி.
இந்த ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத வகையில், ஆட்சியின் தன்மையை மக்களின் முகமலர்ச்சியே பதிலாகச் சொல்லிவிடுகிறது.
கோவையில் நவம்பர் 5, 6 தேதிகளில் நடைபெற்ற அரசுப் பணிகள் கள ஆய்வைப் போலவே நவம்பர் 9, 10 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொண்ட பயணமும் முழுமையான வெற்றியாக அமைந்ததை உடன்பிறப்புகளாம் உங்களிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்”, என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்பின், அந்த 2 நாட்கள் விருதுநகரில் நடந்த அனுபவங்களைப் பகிர்ந்த மு.க.ஸ்டாலின் கடிதத்தின் கடைசியில், “திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அதனால்தான் ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.
அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். கழக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
unknown node