“நானும் இபிஎஸும் இணைய வேண்டும்., பிரதமர் மோடி, அமித்ஷா கூறிய ரகசியம்..,” ஓபிஎஸ் சீக்ரெட்!
பாஜக தலைமை கூறியதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பலனை தான் தற்போது அவர் அனுபவித்து கொண்டிருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறினார்.

கோவை : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக பற்றியும் , எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைவது பற்றிய கருத்துக்களுக்கும் பதில் அளித்து பேசியிருந்தார். அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான முந்தைய சந்திப்பு பற்றியும் அவர்கள் கூறியது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ” அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) நானும், எடப்பாடி பழனிசாமியும் அங்கம் வகித்தோம். அப்போது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என அமித்ஷா பேசினார். தேர்தல் வியூகம் பற்றி பேசினோம். யாரெல்லாம் இணைந்தால் வெற்றி பெற முடியும் என பேசினார். என்னையும் இபிஎஸையும் இணைந்து செயல்பட கூறினார்.
அதன் பிறகு அவர்கள் கூறியதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பலனை தான் தற்போது அவர் அனுபவித்து கொண்டிருக்கிறார் என கூறிய ஓபிஎஸிடம், பிரதமர் மோடி அமித்ஷா கூறிய ரகசியம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ்,” அது ரகசியம் எல்லாம் இல்லை. என்னிடம் அவர்கள், நீங்கள் ஆட்சி அதிகாரமுள்ள ஒரு முக்கிய பதவியில் அங்கம் வகிக்க வேண்டும் என சொன்னார். இன்னொரு விஷயம் அது பரம ரகசியம்.” என்று கூறினார் ஓபிஎஸ்.
அதற்கு முன்னதாக பேசிய ஓபிஎஸ், அதிமுகவில் இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அவர் தலைமை ஏற்று தற்போது வரை தோல்வி தான் பெற்று வருகிறார். தான் எனும் ஆங்காரத்தை அவர் விட்டுவிட வேண்டும். கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டு 4 நாட்களில் கூட்டணியில் இருந்து வெளியே வந்தார் எடப்பாடி. அதன் பலனை அதிமுக அனுபவித்து வருகிறது.” எனவும் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.