சென்னை :பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில், மழைநீரை உடனடியாக அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், பாமக நிறுவனம் ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ளது. 6 செ.மீ மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது சென்னை மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது.தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வீண் விளம்பரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவுக்கு களப்பணிகளை செய்ய வேண்டும். இது நம்மைக் காக்கும் அரசு என்று எண்ணும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் 6 செ.மீ மழை மட்டுமே பெய்துள்ளதாகப் ராமதாஸ் கூறிய தகவல் தவறானது என தமிழ்நாடு அரசின் சரிபார்ப்பகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று (14.10.2024) காலை 8.30 மணி முதல் இன்று (15.10.2024) காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக எண்ணூரில் 10 செ.மீ மழையும், மணலி, திருவிக நகர், பொன்னேரி, ராயபுரம், கொளத்தூரில் 9 செ.மீ மழையும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோடம்பாக்கம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை பகுதிகளில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது” என கூறி தமிழ்நாடு அரசின் சரிபார்ப்பகம் விளக்கம் கொடுத்துள்ளது.
unknown node