ஒரு நிமிடம் போதும் அதை செய்ய., பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு – பிரேமலதா விஜயகாந்த்

Premalatha Vijayakand has said that those in charge should come to the alliance talks without delay.

காலதாமதம் செய்யாமல் விரைந்து தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், செய்யூர் சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக கட்சி ஆரம்பித்து 16 வருடம் ஆகியுள்ளது. கூட்டணி எனக்கு எப்போதுமே பிடிக்காது. தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று கேப்டன் கூறியுள்ளார். ஆனால், எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கூட்டணி என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று கட்சியாக தான் தேமுதிக உருவாக்கப்பட்டது. நிர்வாகிகள் மட்டுமல்ல தொண்டர்களும் தான் கட்சியை கூட்டணிக்கு கொண்டு சென்றுள்ளனர். எனக்கும் கேப்டனுக்கும் இதில் எந்த உடன்பாடும் இல்லை. தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பது தேமுதிகவுக்கு புதிதல்ல. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு நிமிடத்தில் இவர் தான் வேட்பாளர் என சொல்லிவிட முடியும். வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தேமுதிக தயாராகவுள்ளது என தெரிவித்துள்ளார்.

வெற்றி என்ற இலகுக்காகவும், கூட்டணி தர்மத்திற்காகவும் பொறுமை காக்கிறோம். பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என தெரிவித்துள்ளார். விரைவில் தலைவர் விஜயகாந்த் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டி ஒரு நல்ல முடிவை அறிவிப்பார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, க்ளைமாக்ஸில் கேப்டன் விஜயகாந்த வருவார். தனித்து நின்றாலும் 15% வரை வாக்கு வங்கி எங்களுக்கு இருக்கிறது. எங்களை நினைத்து பயப்படுகிறார்கள். நாங்கள் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருப்போம் என கூறியுள்ளார்.

மேலும், இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது. கூட்டணி தாமதம் படுத்துவதால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. இன்னும் ஒருசில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து காலதாமதம் செய்யாமல் விரைந்து தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.