ஓ.பி.எஸ். கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது – அமைச்சர் ராஜ கண்ணப்பன்

Default Image

கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து ஊழியர்களை துன்புறுத்தியது அதிமுக அரசு என்று போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஒபிஸ்க்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் அவர்களால், அனைத்தும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் மீது என்றும் அக்கறை கொண்ட திமுக அரசால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டது. திமுக தலைவர் முக ஸ்டாலின்

தலைமையில் ஆட்சிக்கு வந்த இரு மாதங்களில், கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, போக்குவரத்து நடைபெறாமல் பணியின்றி, நிர்வாகத்திற்கு வருமானமற்ற நிலையிலும், ஒட்டு மொத்த தொழிலாளர்களின் நலன்கள் மீது அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், கடும் நிதி நெருக்கடியிலும் மாத ஊதியத்தை எவ்வித பிரச்சனையுமின்றி வழங்கியதை தொழிலாளர் சமுதாயம் நன்றியுடன் பாராட்டுகிறது.

திமுக ஆட்சி அமைந்த 20 நாட்களில், கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருந்த இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், 01.01.2020 முதல் 30.04.2020 வரை ஓய்வு பெற்ற அனைத்துப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் நலன் கருதி, பல்வேறு பணப் பலன்களாக ரூ.497.32 கோடியினை கருணை உள்ளத்தோடு வழங்கியவர் நம் தமிழ்நாடு முதலமைச்சர்.

திமுக ஆட்சியில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் எந்த தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் எவ்வித பாதிப்பும் இல்லாமல், அவரவர் வழித்தடத்தில் அமைதியாகப் பணியாற்றி வருகின்றனர். உடல் நலம் குன்றியவர்கள் முறையான மருத்துவச் சான்றுகளின் பேரில் இலகுப் பணிகளில் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர். உடல் நலம் குன்றியோர் யாரையும் பணி மாறுதல் செய்து துன்புறுத்தவில்லை.

தொழிலாளர்களை, தொழிலாளர்களாகப் பாவிக்காத அரசு அதிமுக அரசு என்பதற்கு கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள் பட்ட வேதனைகளே சாட்சி என தெரிவித்துள்ளார். 20ரூ தீபாவளிப் போனஸ் கடந்த 1996-2001 கலைஞர் ஆட்சிக் காலத்தில் வழங்கியதை மறுத்து, வெறும் 10ரூ மட்டுமே வழங்கி துன்புறுத்தியது.

இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்குச் சேர வேண்டிய பணப் பலன்கள் உடனடியாக வழங்காமல் இழுத்தடித்தது, வாரிசுகளுக்கு வேலை வழங்காதது அதிமுக ஆட்சியில் தான். தரமில்லாத உதிரி பாகங்கள் கொள்முதல், தரமில்லாத கேண்டீன் உணவு வழங்கியது, விளம்பரங்கள் மூலம் தவறான முறையில் கொள்ளை அடித்தது அதிமுக ஆட்சி.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் பொற்காலமாக அமைய உள்ள  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசின் இரண்டு மாதமே ஆன நல்லாட்சியில் குறைகள் கூற எவ்வித அருகதையும், தகுதியும், ஒ.பி.எஸ்.க்கு இல்லை. தொழிலாளர்களை அரசியில் ரீதியாக பழிவாங்கியது அ.தி.மு.க. ஆட்சியே. அதற்கான சாட்சி மேற்கண்ட ஆதாரங்களே.

மாறாக என்றென்றும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டது எங்களது தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி. ஆகவே, ஓ.பி.எஸ். கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த ஓ.பி.எஸ்., கடந்த 10 ஆண்டுகள் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் தொ.மு.ச. உறுப்பினர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, இன்று யாரோ எழுதி கொடுத்தை கொடுத்து நீலி கண்ணீர் வடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்