தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு வாய்ப்பில்லை..?

Default Image

ஓமைக்ரான் பரவல் 10% நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த நிலையில், தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கக்கூடிய ஓமைக்ரான்  வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. கடந்த மாதம் தென்ஆப்ரிக்காவில் ஒருவருக்கு ஓமைக்ரான் கண்டறியப்பட்டது. சமீபகாலமாக பல நாடுகளில் கொரோனா வேகமாக பரவுவதற்கு ஓமைக்ரான் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

இந்த ஓமைக்ரான் வைரஸ் டெல்டாவை விட 5 மடங்கு வேகத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது. நேற்று ஒமைக்ரான் பரவல் குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ஒமைக்ரான் அச்சுறுத்தலால் உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கவும், இரவு ஊரடங்கு, பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. ஒமிக்ரான் பரவல் 10% நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க திட்டம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது வரை 17 மாநிலங்களில் 358 பேருக்கு ஓமைக்ரான் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 114 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்