அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை – அரசு விளக்கம்..!

Default Image

அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம்.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் 20-11-2021 தேதியிட்ட அறிக்கையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை தமிழ்நாடு அரசு மூடி வருவதாக முற்றிலும் தவறான ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கூட்டுறவு சங்கங்களின் மூலம் தமிழ் நாடு அரசு 131 அம்மா மருந்தகங்களையும், 174 கூட்டுறவு மருந்தகங்களையும் ஆக மொத்தம் 305 மருந்தகங்களை நடத்தி வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஏற்கெனவே இயங்கி வந்த அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை. மாறாக, அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது. கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126-லிருந்து 131-ஆக இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் மருந்தகங்கள் அனைத்தும் 20 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருவதால், ஏழை எளிய மக்கள் பெருமளவில் பயன் பெற்று வருகின்றனர் என்பதனை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது.

அவ்வாறு உணர்ந்ததனாலேயே அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையும் ஆண்டொன்றுக்கு 60 புதிய மருந்தகங்கள் என்கிற அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களை புதியதாக துவக்குவதற்கு கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நடப்பு வருடத்தில், நிர்ணயிக்கப்பட்ட 60 என்கிற எண்ணிக்கையைவிட கூடுதலாக 75 மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் துவங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 131 அம்மா மருந்தகங்கள் மூலம் நடப்பு ஆண்டில் 31.10.2021 வரை ரூ.44.88 கோடிக்கு வர்த்தகமாகியுள்ளது. அதேபோல 174  கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ 48.21 கோடிக்கு விற்பணையாகியுள்ளது.

ஆக மொத்தம் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடத்தப்படும் 305 அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.93.09 கோடிக்கு வர்த்தகமாகியுள்ளது. இந்த ஆண்டில் 31.10.2021 வரை வர்த்தகமாகியுள்ளது. மேலும், அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மையப்படுத்தி கொள்முதல் செய்யப்படும் மூலம் மருந்து மாத்திரைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கும், அதன் மூலம் மேலும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் பலன் பெறுவதற்கும் கூட்டுறவுத்துறை ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளது.

அதிமுக அரசின் அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல மக்கள் நல திட்டங்களுக்கு நிதி நெருக்கடியை காரணம் காட்டி திமுக அரசு மூடு விழா நடத்துவது கண்டிக்கத்தக்கது மலிவு விலையில் மருந்துகள் விற்கும் அம்மா மருந்தகங்கள் மூடும் நடவடிக்கை கைவிடவேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்