பருவமழை பாதிப்பு: எஞ்சிய விவசாயிகளுக்கு 2 நாட்களில் நிவாரணம் – வேளாண் அமைச்சர்

According to Agriculture Minister MRK Panneerselvam, Rs 97.92 crore has been provided to crops affected by the northeast monsoon in 2021.

2021ல் வடகிழக்கு பருவமழையின்போது பாதித்த பயிர்களுக்கு ரூ .97.92 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வடகிழக்கு பருவமழையின்போது அறுவடைக்கு தயாராக இருந்த கார் குறுவை சொர்ணவாரி பயிர்கள் முழுமையாக சேதமடைந்த நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடாக எக்டர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கிடவும், சம்பா பருவத்தில் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட எக்டர் ஒன்றுக்கு ரூ.6038 மதிப்பீட்டில் குறுகிய கால நெல் விதை, நுண்ணுட்ட உரம், யூரியா மற்றும் DAP அடங்கிய பொருட்கள் வழங்கிட முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.

விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் சம்பா பருவத்தில் பாதிப்படைந்த பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.6038 என்ற வீதத்தில் நிதியாக அளித்திட முடிவு எடுக்கப்பட்டது. பயிர் பாதிப்பு கணக்கெடுப்பின் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சேதமடைந்த 4,44,988 ஏக்கர் பரப்பளவிற்குரிய 3,16,837 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.168 கோடியே 35 லட்சம் முதல்வரால் விடுவிக்கப்பட்டது. பயிர் நிவாரணத் தொகை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு 06.01.2022 அன்று வழங்கப்பட்டது.

முதல்வர் மத்திய அரசின் பேரிடர் நிதியை எதிர்பார்த்து காத்திராமல் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் மாநில அரசின் நிதிமூலம் ரூ.168.35 கோடி விடுவித்தார். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கி விபரங்களை சரிபார்க்கும் பணி முடிவடைந்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பொங்கலை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை மற்றும் வங்கிகளின் விடுமுறை காரணமாகவும், நிவாரண நிதி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் 2021ல் வடகிழக்கு பருவமழையின்போது பாதித்த பயிர்களுக்கு தற்போதுவரை 2,23,788 விவசாயிகளுக்கு ரூ.97.92 கோடி நிவாரணமாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய விவசாயிகளுக்கு 2 நாட்களில் நிவாரண நிதி வரவு வைக்கப்படும். இதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.