MKStalin: மெட்ரோ பணிகளை நிறுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில், இதுதொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணி – நெடுஞ்சாலை, வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வருவாய், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் ஆகிய 9 துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
வடகிழக்கு பருவமழை குறித்து முந்தைய ஆண்டுகளின் அனுபவங்களை கருத்தில் கொண்டு, நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மழைநீர் வடிகால் பணிகள், அடைப்புகளை அகற்றும் பணிகள், நீர்நிலைகள் கால்வாய்கள், தடுப்பணைகளின் கதவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரிய பணிகள் மற்றும் சாலையில் பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகரில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை பணிகளை நிறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மின்வாரிய பணிகளுக்கும் சாலையில் பள்ளம் தோண்டக்கூடாது. மழைநீர் கால்வாய் அமைப்புகள் முறையாக தூர்வாரப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்த 2 வாரங்களுக்குள் சென்னையில் பழுதான சாலைகளை சரி செய்யும் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.