அண்ணா பல்கலை., தேர்வுக் கட்டண உயர்வு – அமைச்சர் பொன்முடி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு இல்லை என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

Anna University Minister Ponmudi

சென்னை :அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு இல்லை என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படுகிறது.

தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பட்டங்களுக்கு ரூ.450ல் இருந்து ரூ.670 ஆக உயர்கிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இது புதிய கட்டணம் வருகின்ற நவம்பர் – டிசம்பர் செமஸ்டர் தேர்வில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி, ” பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் அல்ல, அடுத்த ஆண்டும் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிண்டிகேட் மீண்டும் கூடி முடிவெடுக்கும் வரை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் உயராது. அதுவரை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தற்போதைய கட்டண முறையே நடைமுறையில் இருக்கும் “என்று அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார்.