‘புதிதாக உதயமாகும் 2 புதிய மாநகராட்சிகள்’ – பேரவையில் அமைச்சர் கே.என் நேரு அறிவிப்பு.!
திருச்செங்கோடு, உடுமலை, பழனி ஆகிய தேர்வுநிலை நகராட்சிகள் சிறப்பு நிலைக்கு தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அதன்படி, பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன.
மேலும், தமிழ்நாட்டில் நகராட்சிகளின் எண்ணிக்கை 146ஆகவும், பேரூராட்சிகளின் எண்ணிக்கை 491ஆகவும் இருக்கும் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் இருக்கும். நகராட்சிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திருச்செங்கோடு, உடுமலை, பழனி ஆகிய தேர்வுநிலை நகராட்சிகள் சிறப்பு நிலைக்கு தரம் உயர்த்தப்படும். கூடுவாஞ்சேரி, பல்லடம், இராமேஸ்வரம் முதல்நிலை நகராட்சிகள் தேர்வு நிலை நகராட்சிகளாக மாற்றம் செய்யப்படும். மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் முதல் நிலை நகராட்சிகளாகின்றன” என்றார்.
பின்னர், நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த அமைச்சர் கே.என்.நேரு, ” கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரூ.1564 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.900 கோடியில் புதிய சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரங்களாக வளர்ந்து வருவதில் இந்தியாவில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது” என்று கூறியுள்ளார்.