“நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பினைச் செய்யவும்” – முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்..!

Default Image

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக என்ன வழியைப் பின்பற்றியதோ அதே வழியைத்தான் தி.மு.க.வும் பின்பற்றி இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்(ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:

இது இப்போது முடிவுக்கு வராது:

“நீட் தேர்வு ரத்து என்பதற்கான சட்டப் போராட்டத்தை அரசு துவக்கி விட்டதாகவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பக் கொண்டு வர தி.மு.க.வும், அதன் நட்புக்குரிய சமூக நீதி இயக்கங்களும் இறுதி வரை போராடும்” என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்து இருப்பதைப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வராது என்பது சூசகமாகத் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

மேடைக்கு மேடை திமுகவின் முழக்கம்:

நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்று தான் தி.மு.க. தலைவர்களால் மேடைக்கு மேடை முழங்கப்பட்டது. அதை நம்பித்தான் தி.மு.க.விற்கு மக்கள் வாக்களித்தார்கள்.

அதிமுகவின் வழியில் திமுக:

ஆனால், `இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ன வழியைப் பின்பற்றியதோ அதே வழியைத்தான் தி.மு.க.வும் பின்பற்றி இருக்கிறது. அதாவது, மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த வாதத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்வைத்தால், இதற்காக குழுவை அமைத்து, அதன் பிறகு தான் சட்டமுன்வடிவினை நிறைவேற்றினோம் என்று தி.மு.க. கூறக்கூடும்.

அரைத்த மாவையே அரைத்தல்:

ஆனால், அந்தக் குழுவிற்கு எந்த சட்ட அங்கீகாரமும் கிடையாது. இது அரைத்த மாவையே அரைப்பதற்கு சமம். வெறும் சம்பிரதாயத்திற்காக இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றே மக்கள் கருதுகிறார்கள்.

அறிவார்ந்த மக்கள் எளிதில் இதை புரிந்து கொள்வார்கள்:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே ‘சட்டப் போராட்டத்தை அரசு துவக்கிவிட்டது’ என்று சொல்லும்போது, அவருக்கே இந்தச் சட்டமுன்வடிவுக்கு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தான் மக்கள் நினைக்கிறார்கள். காவேரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகள் போல பல ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடக்கும் என்பது தான் ‘சட்டப் போராட்டத்தை அரசு துவக்கிவிட்டது’ என்பதற்கான உள்ளார்ந்த பொருள் என்பதை அறிவார்ந்த மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

அடுத்த நடவடிக்கை-தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்குச் சமம்:

அடுத்தபடியாக, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பக் கொண்டு வர தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார். 1996 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை, நடுவில் 13 மாதங்கள் தவிர, கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அரசின் அமைச்சரவையில் அங்கம் வகித்த கட்சி தி.மு.க. இன்னும் சொல்லப்போனால், தி.மு.க.வின் தயவில் தான் மத்திய அரசுகளே இருந்தன. அப்பொழுதெல்லாம், மத்திய அரசுடன் இணக்கமாகப் பேசி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காத தி.மு.க., இப்போது மத்திய அரசில் அங்கம் வகிக்காத சூழ்நிலையில்,”கல்வி’யை மாநிலப் பட்டியலில் திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்குச் சமம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால்?:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தின் போது சிறிது காலமும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தின் போது 13 மாதங்களும் தான் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. தி.மு.க.வைப் போல் 17 ஆண்டுகள் மத்திய அரசின் அமைச்சரவையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகித்திருந்தால், இந்த நேரத்திற்கு ‘கல்வி’ மாநிலப் பட்டியலில் மீண்டும் வந்திருக்கும் என்பதை இங்கே அழுத்தந்திருத்தமாக சுட்டிக்காட்ட விழைகிறேன்.

நீட் தேர்வு ரத்து:

தற்போது, தி.மு.க. கூட்டணிக்கு 38 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் வர உள்ளன. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசிற்கு தேவையான அழுத்தம் கொடுத்து, ‘நீட் தேர்வு ரத்து’ என்ற அறிவிப்பினைச் செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை அமையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்”,என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
IPL 2025 Ceremony
Senthil Balaji annamalai
Rowdy john muder - 3 person encounter
veera dheera sooran S. J. Suryah
Nagpur Violence
chennai budget