டாஸ்மாக் விவகாரம் : அமலாக்கத்துறை பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், வரும் 25ஆம் தேதி வரை நடவடிக்கை கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனைகள் மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. அமலாக்கத்துறையின் அறிக்கையின்படி, இந்த சோதனையின் போது, டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது.
இது தமிழக அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “டாஸ்மாக் விவகாரத்தில் மேற்கொண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில் இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில்குமார் அடங்கிய அமர்வதற்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனையின் போது ஊழியர்களை வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. யாரையும் துன்புறுத்தவில்லை, சிறை பிடிக்கவும் இல்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இதையடுத்து, எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்..?அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும் அதை செயல்படுத்திய விதம் தவறு என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்னர்.
இந்த நிலையில், மேலும், டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக மார்ச் 25ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தல் வழங்கிய தோடு, டாஸ்மாக் அலுவலக சோதனை தொடர்பாக 24ம் தேதி அமலாக்கத்துறை பதில் அளிக்கமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அவர்கள் பதிவு செய்த ECIR உள்ளிட்டவற்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.