மு.க.ஸ்டாலின் vs அதிமுக! அதிமுகவை அடகு வைத்துவிட்டார்கள்.., தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்…
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் முன்வைத்ததை அடுத்து அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பதில் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சென்னை வந்திருந்த சூழலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார். மேலும், தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையில் NDA கூட்டணி, தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி என தெரிவித்தார்.
இதனை அடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்த கூட்டணி குறித்து தனது கடும் விமர்சனத்தை முன்வைத்தார். அதிமுக – பாஜக கூட்டணி தோல்வி கூட்டணி. அந்த கூட்டணிக்கு தொடர் தோல்வியை தமிழக மக்கள் அளித்தார்கள். அதிமுக தலைமையை அமித்ஷா பேச அனுமதிக்கவில்லை. பதவி மோகத்தால் தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜகவிடம் அதிமுக அடமானம் வைத்தவர் தான் இந்த பழனிசாமி. 2 ரெய்டுக்கு பயந்து அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கு பதில் தரும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், பாஜக பூச்சாண்டிகாட்டி 4 ஆண்டுகளாக ஸ்டாலின் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறார். தன்னிடம் உள்ள ஏவல் கட்சித் தலைவர்கள் துணையோடு மீண்டும் ஆட்சி அமைத்துவிடலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டு வரும் ஸ்டாலினின் தலையில், அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு இடியை இறக்கி இருக்கிறது. அது கொடுத்த வலியின் வேகம் தாங்காமல் ஸ்டாலின் துடிப்பதும், துவள்வதும் அவரது அறிக்கையில் இருந்து தெரிகிறது. என பதிவிட்டுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணியை தொடர்ந்து விமர்சித்தால் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்கள் செய்வது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.