இந்த சுமை மக்களைத்தான் பாதிக்கும்..முழு உரடங்கிற்கு வாய்ப்பிருக்காது என நம்புவோம் – முக ஸ்டாலின்
தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா 2.0 பாதுகாப்பாக இருப்போம் என்றும் பக்கபலமாக நிற்போம் எனவும் கூறி, முக ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா இரண்டாவது அலை உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. அதிலும், இந்தியாவில் அதன் தாக்கம் வேகமாகவும், கோரமாகவும் இருக்கிறது.
ஒரு நாளில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்து நிற்கிறது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்குப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை கவலையையும், வேதனையையும் அளிக்கிறது என கூறியுள்ளார்.
மக்களின் உயிர் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அயராது பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் சேவை போற்றுதலுக்குரியது. அவர்களையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய – மாநில அரசுகளுக்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
போதிய அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் முதல் தமிழ்நாட்டின் வேலூர் வரை பலர் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சைப் பிளக்கிறது. கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பதற்கான தடுப்பூசிகள் மே 1 முதல் 18 வயது மேற்பட்டோர்அனைவருக்கும் போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது.
அனைவருக்கும் தடுப்பூசி என்றும் மருந்துகளை மாநில அரசுகளே நேரடியாகக் வாங்கி கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்த நிலையில், தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் விலையைக் கடுமையாக உயர்த்தியிருப்பது மாநிலங்கள் மீது ஏற்றப்பட்டுள்ள பெரும் சுமையாகும், இந்த சுமை மக்களைத்தான் பாதிக்கும் என குற்றசாட்டியுள்ளார்.
கொரோனா 2.0 எனப்படும் இரண்டாவது அலையின் உயிர்ப்பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் நம் கழகத்தைச் சேர்ந்தவர்களும் மரணமடைகிற வேதனைச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தன் உயிர் போலப் பிற உயிர்களை நேசிப்பதும் – பிற உயிர்களைப் போலத் தன்னுயிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இந்தப் பேரிடர்ச் சூழலில் இன்றியமையாததாகும்.
அதனை உணர்ந்து கழகத்தினர் கவனத்துடன் கடமையாற்ற வேண்டும் என கூறி, மே 2-க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும், தி.மு.கழக நிர்வாகிகளும் – வேட்பாளர்களும் – செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைத்து உடன்பிறப்புகளும் மக்களுக்கு உதவிடும் பணியில் களமிறங்கிச் செயலாற்றி வருவதைக் கவனித்து வருகிறேன். மக்களுக்குத் தொண்டாற்றிடும் கழகத்தினர் அனைவரும் தங்கள் நலனிலும் அக்கறையுடன் இருந்து, பாதுகாத்துக் கொள்வது முதன்மையான கடமையாகும் என கடித்தது கூறியுள்ளார்.
“கொரோனா 2.0 பாதுகாப்பாக இருப்போம்.. பக்கபலமாக நிற்போம்!”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் கடிதம்.
Link: https://t.co/sg5JodBSdq#CoronaSecondWave #DMK #MKStalin pic.twitter.com/p2UIUfBoKf
— DMK (@arivalayam) April 23, 2021