தமிழகத்தில் பெரிய அளவில் மின்தடை;திமுக அரசுதான் காரணம் – ஓபிஎஸ் காட்டம்!

Default Image

தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு தி.மு.க. அரசுதான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம் சாட்டயுள்ளார்.இது தொடர்பாக ஓபிஎஸ் கூறுகையில்:

உற்பத்தி நிறுத்தம்;இரவு நேர மின்தடை:

தற்போது நிலக்கரி பிரச்சனையில் மத்திய அரசு மீது தி.மு.க. அரசு குற்றம் சாட்டியுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள இரண்டு அனல் மின் நிலையங்களில் இருபது நாட்களுக்கு முன்பே உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும்,இதற்குக் காரணம் ஒடிசாவிலிருந்து நிலக்கரியை கப்பல் மூலம் எடுத்து வருவதில் ஏற்படும் தாமதம் என்றும் கூறப்பட்டது.

இதன் காரணமாகவும், தற்போது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதன் விளைவாக ஏற்பட்டுள்ள மின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாகவும் பல இடங்களில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம், அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன.

அமைச்சரின் பதில்:

இந்தச் சூழ்நிலையில்,நேற்று முன்தினம் கோயம்புத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள்,தமிழ்நாட்டின் மின் தேவை 17,300 மெகாவாட் என்றும், இதற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்றும் ஆனால் மத்திய அரசு 48 ஆயிரம் டன் நிலக்கரியைதான் வழங்குகிறது என்றும், பற்றாக்குறையாக உள்ள நிலக்கரியை பெற ஒப்பந்தப்ப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், நிலக்கரி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்றும் கூறியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

மின்தடைக்கு காரணம் மத்திய அரசு தான்:

அதாவது, சொத்து வரி உயர்விற்குக் காரணம் மத்திய அரசு தான் என்று மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எப்படி சொன்னாரோ, அதே பாணியில்,மின் தடைக்குக் காரணம் மத்திய அரசு என்பதை இப்பொழுதே சொல்லிவிட்டார் அமைச்சர் அவர்கள்.அதாவது,மின் தடை பெரிய அளவில் ஏற்பட்டால் அதற்குக் காரணம் மத்திய அரசு என்பதுதான் இதன் பொருள்.இந்தக் கூற்று ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

ஆனால்,தமிழ்நாட்டில் மின் தடை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு தி.மு.க. அரசுதான். மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டுமே தவிர, அதைவிடுத்து பிறர் பழி போடுவதோ அல்லது அதற்கான காரணத்தைக் கூறுவதோ கண்டனத்திற்குரியது.

முதலமைச்சர் தனிக்கவனம்:

எனவே,முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி,மின் தடை ஏற்படாமல் அனைவருக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்வதாக ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்