3 ஆண்டுகளுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டியிருந்தால்,ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம்…!அமைச்சர் உதயகுமார் தகவல்
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டியிருந்தால், ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
2014ல் மோடி ஆட்சி பிரதமராக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாடு முழுவதும் புதியதாக 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2014- 15 பட்ஜெட் துவங்கி 2018-19 வரை எய்ம்ஸ் மருத்துவமனை இடம்பெற்றிருந்தது. ஆனால் இதுவரை ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கூட முழுமையாக அமைக்கப்பட வில்லை.
தமிழகத்தில் தற்போதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ரூ 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலில் , எய்ம்ஸில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 100 இடங்கள், நர்சிங் படிப்புக்கு 60 இடங்கள் ஏற்படுத்தப்படும் .
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 15 முதல் 20 வரையிலான சிறப்பு மருத்துவ பிரிவுகள் மற்றும் 750க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளது. 45 மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நிறைவடையும் என்றும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் அமைச்சர் உதயகுமார் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டியிருந்தால், ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என எனக்குள்ளே கேள்வி கேட்டுள்ளேன்.
அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதாவின் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் .கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய குழு அறிக்கை தாக்கல் செய்த பின்னர், மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து தேவையான நிவாரண நிதி பெறப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நிலை குறைபாடால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்,மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.