பரபரக்கும் அரசியல் களம்., ஒரே மேடையில் விஜய் – திருமாவளவன்.! வெளியான புதுத் தகவல்.! 

சென்னையில் நடைபெறும் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக தலைவர் விஜய் ஒன்றாக கலந்து கொள்ள உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

TVK Leader Vijay - VCK Leader Thirumavalavan

சென்னை :தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான நகர்வுகள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன.  குறிப்பாக விஜயின் தவெக முதல் மாநாட்டிற்கு பிறகு பிறகு அவர் பேசிய கருத்துக்கள், கொள்கைகள் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கூற்று விசிக அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கூற்றை முன்னர் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார்.  அதே கருத்தை, மாநாட்டில் விஜய் பேசியிருந்தாலும், இதனை இப்போதே எதோ ஆஃபர் போன்று அறிவிக்க வேண்டியதில்லை. அவர் முதலில் தேர்தலை சந்திக்க வேண்டும், தங்கள் வாக்கு சதவீதம் என்ன என்பதை அறிய வேண்டும். பிறகு தான் கூட்டணி பற்றியெல்லாம் பேச வேண்டும் என திமுக தரப்பில் கூறப்பட்டது.

இப்படியான சூழலில் தான் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக தலைவர் விஜய் இருவரும் ஒரே நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வு சென்னையில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.

டிசம்பர் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளை ஒட்டி சென்னையில் அம்பேத்கர் பெயரில் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட உள்ளார். இதன் முதல் பதிப்பை பெற்றுக் கொள்ள தான் தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்,  அவரும் கலந்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் – தவெக தலைவர் விஜய் சந்திப்பு நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.