தேர்தல் ஆணையர் பழனிசாமியா? எடப்பாடி பழனிசாமியா?மு.க.ஸ்டாலின்
மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியா?எடப்பாடி பழனிசாமியா ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார்.ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்
இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக மேற்கொள்ளும்.தமிழகத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்படும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுவது வேடிக்கையாக உள்ளது.அதிமுகவுடன் மாநில தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது. தேர்தல் முறையாக நடைபெற வேண்டுமென்ற நோக்கில்தான் திமுக, நீதிமன்றம் சென்றது என்று தெரிவித்தார்.