ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு.! கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வக்கீல்.?

Karuka Vinoth

நேற்று முன்தினம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் வாசல் முன் பேரிகேட் (தடுப்பு) அருகில் கருக்கா வினோத் எனும் நபர் பெட்ரோல் குண்டு வீசினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து மேலும் இரண்டு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட கருக்கா வினோத், சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் என்றும், ஏற்கனவே கடந்த வருடம் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. ஆளுநர் மாளிகையின் முன் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக  கருக்கா வினோத் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெட்ரோல் குண்டு வீச்சு! புகாரை பதிய மறுப்பதாக ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

கருக்கா வினோத்திடம் மேலும் விசாரணையை தீவிரப்படுத்த, 15 நாட்கள் அவர் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டு தற்போது கருக்கா வினோத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் தான் கருக்கா வினோத் ஜாமினில் வெளியே வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு பாஜக தரப்பிலிருந்து கண்டனங்கள் வழுத்து வரும் நிலையில், நேற்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை பதிவிட்டுள்ளார்.

அதில், ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை (பாட்டிலை) வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது.

இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது என வழக்கறிஞர் பெயரை குறிப்பிடாமல் அமைச்சர் ரகுபதி பதிவிட்டுள்ளார்.

இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து திமுக ITWING தங்கள் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், பாஜகவின் திட்டம் அம்பலமாகியுள்ளது. ராஜ்பவன் அருகே பெட்ரோல் குண்டை வீசிய கருக்கா வினோத்துக்கு முந்தைய வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த முத்தமிழ் செல்வக்குமார் ஆஜராகி உள்ளார். என்றும், முத்தமிழ் செல்வகுமார் திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எனவும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு மன்னார்குடி கிழக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக நியமிக்க பட்டதற்கான பாஜகவின் அறிவிப்பையும் திமுக ITWING வெளியிட்டுள்ளது.

திமுகவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழக பாஜக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஓர் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்தது திமுகவினர்.

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது. பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார்.

அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது என்று பதிவிட்டு அதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

திமுக கூறிய தகவலை வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமாரும் முற்றிலுமாக மறுத்துள்ளார். நான் எந்த கட்சியை சேர்ந்தவரும் இல்லை. எல்லா கட்சியினர் மீதான வழக்குகளையும்நான் எடுத்து நடத்தியுள்ளேன். அந்த வகையில் தான் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுக்க உதவினேன். எனக்கும் கருக்கா வினோத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது நான் எந்த கட்சியிலும் இல்லை என்றும் வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார் விளக்கம் அளித்துள்ளர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்