“தமிழக அரசே…அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5000 வழங்குக” – பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

Default Image
புதுச்சேரியில் மழை – வெள்ள பாதிப்பு குறைவுதான்,ஆனால்,அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்திருக்கிறது. அதைப்போல,தமிழக அரசும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5000 வழங்க வேண்டும் என்றும்,நோய் பரவலில் இருந்து கடலூர் மாவட்ட மக்களை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“கடந்த ஆண்டுகளைப் போலவே இப்போதும் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த கடலூர் மாவட்டத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. மற்றொருபுறம் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மழை – வெள்ள நீர் இன்னும் வடியாத பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதாரக் கேடுகளின் விளைவாக நோய் பரவுவதற்கான ஆபத்தும் அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மையான மாவட்டங்களின் வடிகாலாக கடலூர் மாவட்டம் தான் திகழ்கிறது. தென்பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகள் கடலூர் மாவட்டத்தில் தான் கடலில் கலக்கின்றன. இம்மாதத் தொடக்கத்தில் பெய்த தொடர்மழையால் தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீரே முழுமையாக வடியாத நிலையில், கடந்த 5 நாட்களில் விட்டு விட்டு பெய்த மழையும், ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளமும் மாவட்டத்தின் பல பகுதிகளை வெள்ளக்காடாக்கி விட்டன.
கடலூரில் கடந்த 18-ஆம் தேதி 150 மி.மீ மழை கொட்டியது. அதைத் தொடர்ந்து 19-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி, கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கன அடி உட்பட கடலூர் மாவட்ட ஆறுகளில் மட்டும் வினாடிக்கு 4 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் பண்ருட்டி முதல் கடலூர் வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இந்தப் பகுதிகளை விட கடலூர் நகரமும், அதை ஒட்டிய பகுதிகளும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தவிர இன்னும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தாலும் கூட கிராமங்களை விட்டு வெளியேறவில்லை.
கடலூர் மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் இப்போது தண்ணீர் வடியத் தொடங்கி விட்டாலும், முழுமையாக இன்னும் அகற்றப்படவில்லை. பல நாட்களாக தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் பாசி படர்ந்தும், இலை உள்ளிட்ட தாவரக்குப்பைகளும், உணவுக் கழிவுகளும் அழுகியும் கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி, பல இடங்களில் பன்றிகள், நாய்கள், பூனைகள், எலிகள் போன்ற பல்வேறு உயிரினங்கள் இறந்து கிடப்பதால் அவற்றின் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நோய்கள் பரவக்கூடும்.
கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இறந்து கிடக்கும் விலங்குகளை பாதுகாப்பாக ஆழமாக பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும். மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து தெளித்தல், ப்ளீச்சிங் பவுடர் அடித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்த வேண்டும். இவற்றின் மூலம் கடலூர் மாவட்ட மக்களை நோய்ப் பரவலில் இருந்து அரசு காப்பாற்ற வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, விழுப்புரம், ஒருங்கிணைந்த வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, காவிரி பாசன மாவட்டங்கள், திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மட்டும் தான் பற்றாக்குறையான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு குறைந்தது ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசிடமிருந்து பதில் எதுவுமில்லை.
அண்டை மாநிலமான புதுச்சேரியில், தமிழகத்தை ஒப்பிடும் போது, மழை – வெள்ள பாதிப்பு குறைவு தான். ஆனால், அந்த மாநிலத்தில் மஞ்சள் குடும்ப அட்டை, சிவப்பு குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, அதாவது அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் மழை & வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்”,என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்