#BREAKING: தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கிற்கு அரசு பரிசீலனை..!
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் நாளை மறுநாளுடன் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடனும், சட்டமன்ற கட்சி குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை இரண்டு வாரம் அமல்படுத்தவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியது.
பின்னர், சட்டமன்ற கட்சி குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்த அரசு பரிசீலனை செய்யும் என தெரிவித்தார். தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்தினால் தான் கொரோனாவை குறைக்க முடியும் என பரிந்துரைத்துள்ளனர். போலீஸின் அன்பான அறிவுரைகளையும் மீறி ஊரடங்கு விடுமுறை என நினைத்து வெளியே சுற்றி வருகின்றனர்.
கொரோனா பயம் மக்களின் பேச்சில் தெரிகிறது , ஆனால் அவர்களின் செயலில் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா குறைந்ததே தவிர இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கொரோனாவால் மருத்துவத்துறையினர், மாணவர்கள் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர் என முதல்வர் வேதனை தெரிவித்தார்.