நாளை சேப்பாக்கத்தில் டி20 போட்டி – ரசிகர்களுக்கு பேருந்தில் இலவச பயணம்.!

சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டிக்கு செல்லும் ரசிகர்களுக்கு மாநகர பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம்.

T20 Cricket - Bus

சென்னை :இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி கடந்த 22ம் தேதி  கொல்கத்தா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதை தொடர்ந்து, இரண்டாவது டி20 போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. முன்னதாக, ரசிகர்களின் வசதிக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் நாளை நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து டி20 போட்டியை காண வரும் ரசிகர்கள் அரசு பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து தவிர) இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்போர், போட்டி நடப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின் 3 மணி நேரத்திற்குள்ளும் கட்டணமின்றி பயணிக்கலாம். போட்டியை முன்னிட்டு நாளை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம் – சேப்பாக்கம் மைதானம் வரை மாலை 4 மணி முதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node