மாற்றுத்திறனாளிகள் கைது..! கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ் – ஓபிஎஸ்..!

Default Image

மாற்றுத்திறனாளிகள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ் – ஓபிஎஸ். 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகப்படுத்த வேண்டும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘

இன்று (14.12.2021) தமிழ் நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை, தங்களுடைய குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய போதவில்லை என்றும், எனவே, அண்டை மாநிலங்களில் வழங்குவது போன்று, தமிழகத்திலும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த திரு. ஸ்டாலின் அவர்கள், மாற்றுத் திறனாளிகளாகிய தங்களை சந்தித்தபோது, தான் முதலமைச்சராக பதவியேற்றவுடன் உங்களது அனைத்துக் கோரிக்கைகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததை நினைவுகூர்ந்த மாற்றுத் திறனாளிகள், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி இன்று, மாநிலம் முழுவதும் சுமார் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருவதாகக் கூறினர்.

பெயரளவில் மாற்றுத் திறனாளிகள் துறையை தன்வசம் வைத்துள்ள இந்த விடியா அரசின் முதலமைச்சர், மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் மாற்றுத் திறனாளிகளை அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட மனமில்லாமல், அவர்களை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அவர்களது குறைந்தபட்ச கோரிக்கையான, தமிழகத்திலும், மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 1,000/- மாதாந்திர உதவித் தொகையை, அண்டை மாநிலங்களில் வழங்குவது போன்று, குறைந்தபட்சம் ரூ. 3,000/-ஆகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 5,000/- ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பதுதான். இக்கோரிக்கையினை எதிர்கட்சித் தலைவராக இருந்த பொழுது திரு. ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதாகவும், பதவியேற்று 7 மாதங்கள் ஆனபொழுதும், இன்னும் இதை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் மாற்றுத் திறனாளிகள் இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, ஆளும் திமுக அரசை குற்றம் சாட்டினர்.

இவர்களது கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணராத இந்த திமுக அரசு, அவர்களை அடக்கி ஒடுக்கிவிடும் எண்ணத்துடன், அமைதியான வழியில் மாநிலம் முழுவதும் போராடிய மாற்றுத் திறனாளிகளை கைது செய்திருப்பது, ஆளும் அரசின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது.

எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என்றும்; அவர்களை நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த விடியா அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.’ என தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்