கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை! 

அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடு, அலுவலகங்களில் ED சோதனையை அடுத்து, திருச்சியில் உள்ள கே.என்.நேரு இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Minister KN Nehru

திருச்சி: இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான TVK நிறுவனத்தில் இந்த சோதனை தொடர்ந்தது.

சென்னையில் அடையாறு, தேனாப்பேட்டை, சிஐடி காலனி,  எம்ஆர்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, கே.என்.நேருவின் மகனும், திமுக எம்பியுமான அருண் நேருவுக்கு தொடர்புடைய சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நிறுவனத்திலும் அமலாக்கத்துறையினர் தங்கள் சோதனையை தொடர்ந்தனர்.

ED சோதனை சென்னையை தொடர்ந்து திருச்சியிலும் நடைபெற்று வருகிறது. திருச்சியில் கே.என்.நேருவின் மறைந்த சகோதரர் ராமஜெயம் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனை மேலும் நீண்டு தற்போது திருச்சி தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சோதனையில், துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவதால் அவரது இல்லத்தின் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!