#ElectionBreaking: மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் – தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சிபிஎம்.!
சட்டபேரவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
வரும் சட்டப்பேரவையில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி அண்மையில் அறிவித்தது.
இதனையடுத்து, இன்று வரும் சட்டபேரவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். இலங்கை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் உரிமை காக்கப்படும். முதியோர் ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்துவோம். பெண்களுக்கு சட்டமன்றம் பாராளுமன்றத்தில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம்.
இந்திய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சி அதிகப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆயுஷ் மருத்துவ முறைகள் அனைத்தும் ஆதரிக்க வேண்டும் என பல்வேறு அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. சிபிஎம் ஆட்சி வந்தால் வாக்குறுதிகள் கொடுப்போம் என்றும் தற்போது தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்தையும் வலியுறுத்துவோம் எனவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.