தேர்தல் முக்கியம், பிரச்சாரம் முக்கியம், அதே நேரத்தில் உயிரும் முக்கியம் - அமைச்சர் பாண்டியராஜன்
தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவினால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அந்த தொகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்தல் பணி இடத்தை இன்று திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அப்போது, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை 10 ஆண்டுகால ஆட்சியில் ஏன் நிறைவேற்றவில்லை என்று மக்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஆனாலும், கடந்த தேர்தலின் போது அதிமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை வரவிட கூடாது என கூறியுள்ளார். மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இரண்டாவது அலை வந்திருப்பது கவலையளிக்கிறது என கூறினார்.
மேலும், தேர்தல் முக்கியம், பிரச்சாரம் முக்கியம், அதே நேரத்தில் உயிரும் முக்கியம் என கூறி, தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவினால் மீண்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், தற்போது முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் அதிகாரிகள், தலைமை செயலாளர் தலைமையில் முடிவு எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.