“17 வயது சிறுமி 7 பேரால்.., முதலமைச்சர் என்ன செய்தார்?” இபிஎஸ் சரமாரி குற்றசாட்டு!
கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. குற்றத்தை தடுக்க முதலமைச்சர் என்ன செய்தார்? என எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை உக்கடம் பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார். அவரை காணவில்லை என அவரது பாட்டி போலீசில் புகார் அளித்த அடுத்த நாள் அந்த சிறுமி வீடு திரும்பியுள்ளார். சிறுமியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனது சமூக வலைதள பக்கம் மூலம் தெரிந்த நண்பர்கள் அழைத்ததன் பெயரில் குனியமுத்தூர் பகுதிக்கு சென்றதாக கூறினார்.
அங்கு ஒரு பகுதியில் அறை எடுத்து தங்கிய சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் கூறியுள்ளார் எனக் கூறப்படுகிறது. சிறுமி வாக்குமூலம் அடிப்படையில் போக்ஸோ வழக்குப்பதிவு செய்த உக்கடம் பகுதி போலீசார், இதில் தொடர்புடைய 7 பேரையும் (கல்லூரி மாணவர்கள்) கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிச்சாமியும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதில், ” கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக திமுக ஆட்சியில் தமிழ்நாடு மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது.
“குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்” என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார் தனக்கு தானே “அப்பா” என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பரிபோனதற்கு யார் பொறுப்பு?
பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். ” என பதிவிட்டுள்ளார்.
கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது.
“குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்” என்று சொல்லும்…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) February 18, 2025