"அரசின் கஜானாவை காலி செய்த எடப்பாடி அரசு"- டிடிவி. தினகரன் குற்றச்சாட்டு!

TTV Dhinakaran said that the government has cleared the state treasury whether the water levels have been cleared or not

நீர் நிலைகளை தூர்வாரினார்களோ இல்லையோ, அரசின் கஜானாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நன்றாக தூர்வாரிவிட்டது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடங்கவுள்ளது. தேர்தல் தொடங்க இன்னும் 10 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாமக்கல் மேற்கு, பரமத்தி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் நீர் நிலைகளை தூர்வாரினார்களோ இல்லையோ, அரசின் கஜானாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நன்றாக தூர்வாரிவிட்டது. கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினார்கள். அப்பொழுது எந்த பணிகளும் நடைபெறாத நிலையில், அந்த காலக்கட்டத்தில் ரூ.1 லட்சம் கோடி கடன் என துணை முதல்வர் தெரிவித்ததாக கூறினார்.

மேலும் பேசிய அவர், தொடர்ந்து பத்து ஆண்டுகாலமாக ஆட்சிக்கு வர முடியவில்லை என திமுக தவியாய் தவித்து வருவதாகவும், மறுபக்கம் பழனிசாமி தலைமையிலான அரசு கஜானாவை காலி செய்து, சானிடைசர் அடித்து மூடி வைத்துள்ளதாக தெரிவித்தார். ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்து, கஜானாவை பார்த்து காலியாக இருந்தால் பொதுமக்கள் சொத்து, உடமைகள் சூறையாடப்படும் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, பரமத்தியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு திருச்செங்கோடு தொகுதியின் அமமுக வேட்பாளர் ஹேமலதா பிரச்சாரத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.